அது இருக்கும் வருடம் 2015 வாக்கு. பலரின் மூலமாகப் பகிரப்பட்ட அந்தக் கதை, நல்வினையின்பொருட்டு நம் கண்ணிலும் பட்டது. பொதுவாகவே ஹில்லி ஏரியாக்களென்றால் பிரியமென்பதாலும், கதையின் முதல் வரியிலேயே கதை துவங்கி, விஷுவல்களாக விரிந்து, மலைவாசஸ்தல வீட்டின் அதிகாலைக் குளிரில் கம்பளிக்குள் கால்களை இழுத்துக்கொள்வது போல் கதை நமைக் கொண்டது.
சிறு வயது முதலே பிடிக்கவே பிடிக்காத தென்றல் வந்து எனும் பாடலை, திடீரென ஒரு நாள் துவங்கி, வாழ்க்கையின் காரணமாக இரண்டு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அப்பாடலை மட்டுமே கேட்கும் நிலையும் அப்போது இருந்தது. இப்படி எல்லாம் கூடி வந்த பொழுதில், தொட்டபெட்டாவின் உச்சி டெலஸ்கோப் டவர் போல இந்தக் கதை நம்மை அடைந்தது.
நன்றாக நினைவிருக்கிறது. அதை அலுவலகத்தில் படித்தேன். அப்போதெல்லாம் வீட்டுக்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம், இரண்டு பஸ் மாறல்கள். அன்றிரவு வீட்டுக்குச் செல்லுமுன் ஏழெஉட்டு முறை படித்திருப்பேன்.
அதற்குப் பின் எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம். பாகு, அதனுள்ளிடப்பட்ட க்லோப்ஜாமைச் சூழ்ந்துகொள்ளுமே, அப்படிச் சூழ்ந்து கொண்டது இக்கதை. குலோப்ஜாமை உண்ட விரல்களில் பிசுபிசுப்பு ஒட்டியே இருக்குமே, துடைத்தாலோ, கழுவினாலோ விலகாத பாகு. அப்படி எப்போதும் உடன் ஒட்டிகொண்டது நிஷாகந்தி.
எத்தனை பேரிடம் இதைப் பிரச்சாரம் செய்திருக்கிறேனென சாட்டுகளில் தேடினால் ஆச்சரியமாய் இருக்கிறது.
அடித்துப் பிடித்து அண்ணன் சிவராமன் அவர்களிடம் கதையைப் பற்றிப் பேசி அதன் அடுத்த பாகத்துக்காக வெய்ட் செய்வதாகக் கூறி, பின் அவ்வப்போது தொந்தரவு செய்து அதன் இரண்டாம் பாகமும் வந்தபின் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது மனம்.
இப்போதும் அதைப் படிக்கையிலெல்லாம் மனக்கிளர்ச்சி தோன்றும். அந்தக் கதையில் ஏதோ ஒன்று இருக்கிறது. நிஷாகந்தி படித்த பின் கொஞ்ச நாள் செண்டு (குருட்டு தைரியத்தில்) இதுக்கு tribute செய்றாப்ல நா ஒரு பார்ட் எழுதுறேன் எனக்கூறினேன். பழகிய பாவத்திற்காக என்னலாம் கேக்கணுமோ எனக்கருதியிருப்பார். அவர் நன்மக்கள் என்பதால் எதையும் வெளிச்சொல்லவில்லை.
அவரிடம் கூறியதுதான், அதன் பின் எதுவுமே ஊறவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களுக்கு. பின் ஒருநாள், பரண் மேல் எதையோ எடுக்கையில் கைதவறிக் கலகமாகி நாலஞ்சு சாமான்செட்டுகள் ஒன்றாகக் கொட்டுமே, அந்த மாதிரி விழுந்தது. பின் அது சம்மந்தப்பட்ட டேட்டா கலக்சனுக்கு ஒன்றரை வருடம். பௌர்ணமியில் ஆரம்பித்து பௌர்ணமியில் முடிக்கத் திட்டமிட்டு, தினம் ஒரு எபிசோடு எனத் துவங்கி (சில நாள் வரவில்லை, for obvious reasons, IYKYK). நாம் அதுவரை முயலாத ஒரு முயற்சியாக அது அமைந்தது. technicalலாகவும் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. Technologyயின் பயனாக நிறைய ஜிம்மிக்ஸ் (அல்லது குரங்குச் சேட்டைகள்) செய்து பார்க்க முடிந்தது. கடைசி இரண்டு எபிசோடுகளில் வித்டிராயல் சின்றோம் ஏற்பட்டு கண்ணீர் வந்ததெல்லாம் அட கற்பாறைக்குள்ளொரு சுகர்கேண்டியா எனத் தோன்றியது. இந்தக் கதையை பார்க்கில், ரயிலில், ப்லேனில், ரோட்டில், டேட்டில் எனப் பலப் பல இடங்களில் எழுதியது மறக்கவியலாதது. போலவே, கொலைக் கேசுகளின் ரெபரன்சுக்காக நிஜ டச்சுப் போலிஸ் ஒருவரிடம் அடிக்கடிப் பேசி, ஒரு கட்டத்தில் நான் வீட்டில் ஒரு பிணத்தை வைத்திருக்கிறேன் என அவர் சந்தேகப்பட்டுக் கேட்டதெல்லாம் சுவாரசியம். நமக்கு நாமே கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷம் இருக்குமல்லவா, அப்படிப்பட்டது இந்தக் கதை.
நமக்கு மிக மிக மிகப் பிடித்தமான "நித்திரை அழகியும், நிஷாகந்தியும்" எனும் பெருஞ்சிறுகைதைக்கு அண்ணன் சிவராமனுக்கு மீண்டும் நன்றி. நிஷாகந்திக்கு நன்றி நவிலும் பொருட்டு (tribute ஆக) 2023 வருடம் எழுதப்பட்ட ஷி (நிஷாகந்தி 3). அத்தனை எபிசோடுகளும் தொடு இணைப்புகளாக:
Comments
Post a Comment
Pass a comment here...