மார்சுக்கு முதல் மனிதக் குடும்பத்தை அனுப்பவிருப்பதாய் மெலன் எஸ்க் சொன்னதுமே உலகச் சோசியல் மீடியா உலகம் முழுவதும் பற்றிக்கொண்டது. குறிப்பிட்டுச் சொல்வதானால், எஸ்க் அனுப்பத் திட்டமிட்டிருப்பது ஒரு சிறு அல்லது குறுங்குடும்பமல்ல, வரவு நல்ல உறவு, சம்சாரம் அது மின்சாரம் மற்றும் பற்பல தெலுகுப் படங்களில் பார்ப்பது போல ஒரு gigantic பெருங்குடும்பத்தை அனுப்பவிருப்பதாய்ச் சொன்னதும் தான் பரபரவெனப் பற்றிக் கொண்டது.
[Meanwhile, சோசியல் மீடியாவுக்கு பற்றிக்கொள்ளக் காரணமா தேவை? தினமும் காலையில் எழுந்தவுடன் நான்கு டயர்களைக் கொளுத்தி உருட்டிவிடுவதுதானே அதன் தினந்தோற்று ருடீன் எனப்படும் வழக்கம்? அவ்வளவு ஏன், புதன்கிழமை வந்துவிட்டால் “What a week, huh?”, “Captain, it’s wednesday!” எனும் மீமை ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் பகிரும் டீக்கடையாகப்பட்டது சோசியல் மீடியா. அத்தகைய டைனோசருக்கு இத்தகைய அவல் கிடைத்தால் விடுமா? ‘ங்கைய் ங்கைய்’ என மென்று துப்பிவிட்டது. இது நம் மூலக் கதைக்குச் சம்மந்தமில்லாதது. Rant எனும் வகைமையிலமைந்தது. நாம் அதைத் தாண்டிக் கடந்து விடுவோம்.]
[எடுத்ததும் மெலன் எஸ்க், சம்அதுமின்., எனக் கதை ஆரம்பித்துவிட்டதால் இது எதோ 2024 அல்லது 2025 அல்லது 2026 போன்று இரண்டில் ஆரம்பிக்கும் ஆயிரமாவது வருடத்தில் நடைபெறும் (அல்லது நடைபெறவிருக்கும்) கதை என நினையாதீர்கள். நடக்கும் வருடம் 3041. எனவே இதுவரை படித்தவரை உங்கள் மனக்கண் உண்டாக்கிய மனப்படிமங்களை மீண்டும் மீள் உருவாக்கிக்கொள்ளுங்கள்.]
மெலன் எஸ்க் பலகட்டங்களில், நாய், பன்றி, கரப்பான் முதலியவற்றை மார்ஸுக்கு அனுப்பிச் செய்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகள் அல்லது பாடங்களைக் கற்றுக் கொடுத்தபின், தற்காலிகமாகச் சில மனிதர்களையும் அனுப்பிச் சோதனை செய்ததைத் தொடர்ந்து, முதல் மனிதக் குழுமத்தை அங்கு அமைத்து, அவர்கள் மூலம் மனிதச் சமூகத்தை மார்ஸில் பரவச் செய்ய வேண்டும் என்பது அவரின் முன்னூறாண்டு காலத் தொலைநோக்குத் திட்டம்.
அங்கு அனுப்பப்பட, உலகின் ஒவ்வொரு இன, மொழி, நாட்டிலிருந்தும், பல்வேறு திறன், வயது, பாலினத்திலிருந்தும், உடற்கட்டுகளிலிருந்தும் பற்பல மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சோதனைகள் மற்றும் பயிற்சி மட்டுமே மூன்று ஆண்டுகள் நடைபெறும்.
மார்ஸில் பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகள், சட்டதிட்டங்கள், ஆபத்துகால நடவடிக்கைகள், உளவியல் பயிற்சிகள் உட்பட ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப்படும் Do’s and Don'ts எனும் பெரிய அட்டவணையே உண்டாக்கப்பட்டது. அவை குறித்த குறிப்புகளும் ஒரு சிறிய கையேட்டில் தரப்பட்டது. மனிதர்கள் தத்தமது பைபில், குரான், கீதை, Das Kapital, திரிபிடகம் இவற்றோடு அந்தக் கையேட்டையும் பக்தி-பத்திரமாக வாங்கி வைத்துக்கொண்டனர்.
கையேட்டில் தனி மனித அளவிலான உடற்-மனக் கட்டுப்பாடுகள், குடும்ப, சமூக அளவிலான சட்டங்கள் என எல்லாமே மிகவும் விரிவாக வகுக்கப்பட்டது. டூஸ்டோண்ட்ஸ் அத்தனையிலும் அடிநாதமாக இருந்தது மனிதர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் பல்கிப் பெருகுவதற்கும் ஏதுவான தீர்மானங்கள்.
ஒருவருக்கோ, பலருக்கோ அல்லது அத்தனை பேருக்குமோ ஏதும் ஆபத்து ஏற்படின், எந்த முடிவு அங்கே உயிரைப் பிழைக்க வைக்குமோ அந்த முடிவை அனைவரும் ஏற்கும் வண்ணம் உறுதிமொழிகள். ஒருவேளை அத்தனை பேருக்கும் ஆபத்தென்றால் முதலில் தன் உயிரைக் காத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடித் தப்பித்துவிடவேண்டும். பிறகு மிச்சமீதிப் பேர் உயிரோடிருந்தால், அவர்களிடம் கூட்டாணிக்கு வரவேண்டும்.
இந்தச் சட்டதிட்டங்களுக்கெல்லாம் இங்கே பூமியில் அளிக்கப்படும் பயிற்சியின்போது நன்றாக மண்டையை மண்டையை ஆட்டிவிட்டு, செவ்வாய்க்குச் சென்றபின் டகுல்பாஸ் வேலை காட்டி, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க முயன்றால் அவர்களை இங்கிருந்தே (உடலுக்குள் செலுத்தப்பட்டுள்ள சிப் மூலம்) உயிர்நீக்கம் செய்யும் டெக்னாலஜி வரை தயார். இது வருடம் 3041. இதுகூட முடியாதா பின்னே?
பல்வேறு phasesகள் கொண்ட இந்த மிஷனில், Survival எனும் ஒரே ஒரு குறிக்கோளை முன்னோக்கியே இந்த முதற், பெரிய பயணம். இந்த மிஷனின் வெற்றியானது, மார்ஸுக்கு அனுப்பப்பட்ட மக்கள் அனைவரும் குறைந்தது மூன்று வருடங்களேனும் உயிர் பிழைத்து இருப்பது. இது வெற்றி பெறின், அடுத்த மிஷனில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அனுமதி முதலிய phasesகள் உள்ளன.
ஆகவே, இந்த மிஷனில் செல்வோர் கொஞ்சம் ஒருவருக்கொருவரிடத்தில் ‘அப்படிஇப்படி’ இருந்துகொள்ளலாம், ஆனால் குழந்தை அளவுக்குச் செல்லும் ‘அப்படிஇப்படி’யானது பாதுகாப்புக் காரணங்களால் தடுக்கப்பட்டது. அதற்காகவே பிரத்தியேக ரீயூசபில் பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்பட்டன.
[ரீயூசபில் என்றால் பயன்படுத்தியபின் அலசித் துவைத்துக் காயப்போட்டு மீண்டும் பயன்படுத்தும் ரீயூசபிலிட்டி அல்ல, பாயும்நீர்த்துளியில் உள்ள உயிரணுக்களை உடனேயே அழித்துவிடும் கிரீம் பூசப்பட்ட பா.வுபகரணம். உயிரணுக்கள் நீக்கப்பட்டதும் எஞ்சியிருக்கும் நீர்த்துளியானது அடுத்த முறைக்கான லூப்ரிகண்ட்டாகப் பயன்படும்]
பாவுபகரணமில்லாமல் கசமுசாவில் இறங்கினால் சிப் இருக்கிறது, அதில் முள்ளுமிருக்கிறது. பொத்தானை ஓர் அழுத்துதான். அத்தானின் அத்தனையும் அத்தமனம் ஆகிவிடும். டெக்னாலஜி பூமியிலிருந்தே வேலையைக் காட்டும்.
இப்பயணம், மனித வரலாற்றிலேயே, அல்லது அண்டம் தோன்றிய வரலாற்றிலேயே முற்றிலும் புதுமையான, வினோதமானது. இஃதொரு மனித நாகரீகத்தின் புதிய துவக்கம். டெக்-கால நாகரீகத்திலிருந்து கற்-கால நாகரீகத்துக்கான பின்னோக்கிய, ஆனால் மனித குலத்தை முன்னகர்த்தும் பயணம். இதன் விளைவுகளும், விபரீதங்களும், அற்புதங்களும், ஆச்சரியங்களும் என்னென்னவென்பதை அறிய உலகமே காத்திருந்தது.
மார்ஸில் உயிர் பிழைக்க & வாழ்வதற்குத் தேவையான தந்திரங்கள், திறன்கள், பயிற்சிகள் அனைத்தும் அனைவருக்கும் அளிக்கப்பட்டன. [இந்தப் பாய்ண்ட்டுதான் ஏற்கனவே சொல்லப்பட்டாகிவிட்டதே என படிப்பவர்கள் நினைக்கக்கூடும். பயிற்சியிலும் இப்படித்தான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அதைச் சொல்லிக்கொண்டே இருப்பர், மனப்பாடமாகப் பதிய. அந்த நேர்த்தி நேட்டிவிட்டிக்காக இங்கும் சொல்லப்படுகிறது.]
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தொலைக்காட்சி எனும் கருவி மூலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டதாம். அதில் பங்குபெறுவோர் தங்கள் தோள்பட்டையில் ஒரு சின்ன பையை எப்போதும் மாட்டியிருக்க வேண்டுமாம். அதில் இருக்கும் மைக்கானது அவர்கள் பேசுவதை எப்போதும் பதிவு செய்துகொண்டே இருக்குமாம். அதை அவர்கள் கழட்டவே கூடாதாம். அதைப்போலவே ஒரு கருவிப்பையானது மார்ஸர்களுக்கும் தரப்பட்டது. அக்கருவி, சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றை உறிஞ்சி, அது என்னவகை வாயுவாக இருந்தாலும் அதை உயிர்வளியாக மாற்றி, அப்பையை அணிந்திருப்பவரைச் சுற்றி 0.5 மீட்டருக்கு உயிர்வளியை (ஆக்சிசன்) நிரப்பிவிடும். நடக்கும்போதும், ஓடும்போதும், படுக்கும்போதும் எப்போதும் அதை அணிந்திருக்க வேண்டும். அந்தக் கருவி ஆக்சிஜனை தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.
அதுமட்டுமின்றி, திடீரென கதிரியக்கத் தாக்கமோ, அல்லது வேறு சில ஆபத்தான கதிர்களோ, அனைத்தையும் விட்டும் இக்கருவி காக்கும். கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு முட்டைக் கூட்டை, அதை அணிந்தவரைச் சுற்றி அமைத்து, சுவாசிக்கக் காற்றும் கொடுத்து, சூரிய, அண்டவெளிக்கதிர்களிலிருந்து காக்கவும் செய்யும் ஒரு பர்சனலைஸ்டு மினி ஓசோன் படலம் கப்புல்டு வித் அமேசான் காடு அக்கருவி என வைத்துக்கொள்ளலாம்.
[ஓசோன், அமேசான் போன்றவையும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இருந்தவைதானாம். பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களால் அவை இரண்டாயிரத்து நூறு வாக்கில் அழிக்கப்பட்டதாம்.]
மனிதனின் ஆதாரமான சுவாசத்துக்கான ஏற்பாடு ஆயிற்றா? அடுத்து ஆகாரமான சாப்பாடு. முற்காலத்தில் சமையல் என்று ஒன்று இருந்ததாகவும் உணவை நெருப்பின் மூலம் சமைத்ததாகவும் டிஜிட்டல் சுவடிகளில் வீடியோக்குறிப்புகள் காணப்படுகின்றன. தற்போது அவையனைத்தும் கேப்ஸ்யூல்களாகி விட்டன, வேளா வேலைக்கு மாத்திரை போட்டால் போதும் என்றுதானே சொல்லப்போகிறேன் என நினைக்கிறீர்கள்? என்னய்யா இப்படிப் பழைய பங்க்ச்சுவேஷனாக இருக்கிறீர்கள்? உணவுக்குப் பதில் மாத்திரை சாப்பிடுவதெல்லாம் 2500களின் பழக்கம். தற்போது எல்லாவற்றுக்கும் நீடில்-லெஸ் இஞ்செக்ஷன்கள் (ஊசியில்லா ஊசி) வந்துவிட்டன. ஒரு நாளின் காலையிலும் இரவிலும் இரு முறை செலுத்திக்கொண்டால் போதும்.
இஞ்செக்ஷனிலிருந்து வெளிவரும் சத்து வெட்டொளியானது உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களையும், சக்தியையும் கொடுத்துவிடும். பேனாவைப்போலிருக்கும் இதை, மனிதர்களின் வயிற்றில் வைத்துப் பொத்தானை அழுத்தினால் ப்லிமென் நிறத்தில் ஒரு flash வரும் (ப்லிமென் - 2900 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆதார நிறங்களில் ஒன்று). அந்தஃப்ஃப்லாஷே போதுமானது. போஷாக்கான உணவாகிவிடும். அடுத்து பசிக்கையில், அல்லது மாலையில் மீண்டும் ஒரு அமுக்கு. பசியமர்த்திவிடலாம்.
மனிதனுக்கு இன்னும் சவாலாக இருப்பது நீர் மட்டுமே. என்ன முயன்றும் அதை மட்டும் எளிய செலவில் உண்டாக்கவே முடியவில்லை. இதற்கென தனி ராக்கெட்டுகள் பூமியிலிருந்து ஷிஃப்ட் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மார்ஸில் இருந்த பனிப்பாறைகளை பெயர்த்து உருக்குகிறேனென்று அங்கு போட்ட இரண்டு அணுகுண்டுகள் நீரைப் பாழ்படுத்திவிட்டன. அதன் வீரியம் குறைய இன்னும் சிலபல ஆயிரமாண்டுகள் ஆகுமென்பதால் தண்ணிராலி ராக்கெட் சர்வீஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.
போதாத வேளைக்கு மனிதர்களின் வியர்வை, சிறுநீர், உமிழ்நீர் என அனைத்தும் ரீசைக்கிளப்பட்டு மீண்டும் குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது. உணவுப்பழக்கம் இல்லையாதலால் மலம் வருவதில்லை. ஆனால் நீர் கட்டாயம். காற்றிலிருந்து நீர் உற்பத்தி செய்யும் ப்ராஜக்டும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்றாலும் அது cost effectiveவாக இல்லை என்பதால் இன்னும் ஆய்வுகள் தொடர்கின்றன.
இவை போன்ற எண்ணற்ற அறிவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் துணையோடே மார்ஸுக்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தால் நேரவிரயம் ஆகிவிடலாம். இக்கதையைப் படிப்பவர்களில் பலர் பஸ்ஸுக்காகக் காத்திருக்கலாம். அந்த நேரத்தில் விலாவரியாக விளக்கிக் கொண்டிருந்தால் பஸ்ஸுக்கு லேட்டாக வாய்ப்புள்ளது. எனவே எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்ட இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு மேற்கொண்டு நகர்வோம். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேனென்றால், அதற்காகச் சொல்கிறேன்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஜதைஜதையாக மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனரல்லவா? அவர்கள் தங்களுக்குள் பரிட்சயமாகிக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்துகொள்ளவும், பழக்கவழக்கங்கள், வல்னரபிலிட்டிக்கள், செண்ட்டிமெண்ட்டுகள் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் விளக்கப்பட்டு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியமும் பயிற்றுவிக்கப்பட்டது. (இதை சட்ட ஒழுக்கு எண் 453B என அழைத்தனர்.)
மார்ஸில் நல்லநாள்கிழமையன்று ஒருவர் மற்ற ஒருவருக்கு எதையோ சொல்லச் செல்ல, அப்போது பார்த்து அங்கு இருக்கும் இன்னொருவர் “ஹ்ஹாவுர்ச்ச்” எனத் தும்ம, “நான் நல்ல விசயம் சொல்லவரப்போ அபசகுணமாத் தும்மிட்டான்” என வீண் விலாய்கள் துவங்கி சில்லறை வர்த்தகத் தகராறுகள் உண்டாகிவிடக் கூடாது எனும் முன்னெச்சரிக்கை ஏற்பாடே இந்த 453B.
[உங்களுக்குத் தெரியுமா? என் வீட்டுக்குள்ளிருக்கும் நம்பிக்கையை உலகின் மறுமூலையில் இருக்கும் ஒருவன் அவன் வீட்டுக்குள் இருந்து அவமானப்படுத்திவிட்டான் எனக்கூறி எண்பத்தேழு ஆண்டுகள் போர் நடந்ததாம் இரண்டாயிரங்களில். தகவல் உபயம்: டிஜிடல்ஃபாஸில்]
எல்லாப் பயிற்சியும் பரிசோதனைகளும் முடிந்தபின், மார்ஸுக்குச் செல்லும் தேதி குறிக்கப்பட்டது. சுமார் எழுபத்து இரண்டு பேர்களை ஏற்றிச் செல்லும் அந்த மிகப் பிரம்மாண்ட ராக்கெட், வானைத் தன் கூர்முனையால் நோக்கி, உடலின் ஆங்காங்கு இருந்து வெண்புகைவிட்டுப் பெருமூச்செறிந்து நின்றுகொண்டிருந்தது.
மார்ஸுக்குச் செல்லும் பயணியருக்கு பிரிவு உபசார விழாவும் பாராட்டும் நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் ராக்கெட்டை நோக்கி நடந்தனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் அங்கியில் அவரவர்க்கான இருக்கை எண்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ராக்கெட் பூமியை விட்டுப் புறப்பட்டு நிலவை ஒரு வட்டமிடும் வரை யாரும் இருக்கையை விட்டு எழக்கூடாது. நிலவின் சுற்றுப்பாதையைத் தாண்டியபின் ராக்கெட்டுக்குள் உலவிக்கொள்ளலாம். போலவே மார்ஸில் தரையிறங்குமுன் அனைவரும் இருக்கையிலமர்ந்து சீட்பெல்ட் அணிந்து கொள்வது கட்டாயம். இல்லாவிடில் ஈர்ப்பு விசையால் உடல் வீசப்படும் ஆபத்து உண்டு.
தத்தமது நம்பிக்கையில் நம்பும் கடவுளை அவரவர்கள் வேண்டிக்கொண்டு, அக்கடவுளின் பெயரையும் உதவியையும் வேண்டி ஏதோ மந்திரம் உச்சரித்துக்கொண்டு ராக்கெட்டுக்குள் உள்ளே செல்லத்துவங்கினர் மக்கள். இவை எதிலும் நம்பிக்கையில்லாத குரூப்பொன்றும் இருந்தது. “ராக்கெட் டமார்னு வெடிச்சா இதுல எந்தக் கடவுள் வந்து ஒங்கள மட்டும் காப்பாத்திட்டுப்போவார்?” என அவர்கள் மற்றவர்களிடம் கேட்க நினைத்தாலும், அதைக் கேட்பது தடை செய்யப்பட்டிருந்ததால் கேட்கவில்லை (நினைவுக்கு: சட்ட ஒழுக்கு எண் 453B).
முதலில் வயது கூடியவர்கள் ஏறிச்சென்று உச்சியிலிருக்கும் முதல் டெக்கில் அமர, பின் வயதுக்கேற்றாற்போல் அடுத்தடுத்த வயதினர் அடுத்தடுத்த டெக்குகளுக்கு அனுப்பப்பட்டனர். அனைவரும் தங்கள் சீட்டுக்களில் அமர்ந்தமேனிக்கு இருந்தனர். அடியில் இருந்த டெக்குகள் உட்காருவது போலின்றி சற்றுச் சாய்வாகப் படுத்த நிலையில் இருந்தன. அதற்குக் காரணம் ஏரோடைனமிக்ஸ், இண்டக்ரல் கால்குலஸ் என ஏகப்பட்ட காரணங்களுண்டு.
அனைவரும் ராக்கெட் வண்டியில் ஏற்றப்பட்டு வண்டி புறப்படத் தயாரானது. அனைவரின் boardingகும் முடிந்தபின் கடைசிக் கட்ட பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதற்கு ஒரு 3 மணி நேரங்கள் ஆகின. இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வண்டி புறப்படப்போகும் கவுண்ட் டவுன் துவங்கியது.
- 00:30:17:888
- 00:30:16:888
- 00:30:15:888
சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் அந்தப் புதிய பயணத்தின், மனிதகுல அறிவியற் பாய்ச்சலின் காட்சிகளை உலகம் முழுவதும் ஸ்தம்பித்துத் தத்தமது வீடியோ உபகரணங்கள் வழிகாகப் பார்த்துக்கொண்டிருந்தது. கொண்டாட்டங்களும் உற்சாகங்களும் புரையோடிக்கொண்டிருந்தன.
ராக்கெட்டின் கீழ் டெக்கில் சீட்டோடு கட்டப்பட்டு இருந்த நம் கதையின் நாயகன் பரணிக்ரிஷ்ஷின் தோளில் யாரோ தட்டுவது போலிருந்தது. பிரம்மையாக இருக்கும் எனக் கண்டுகொள்ளாமல் இருந்தான். அப்போது தன் தோள் மீண்டும் தட்டப்பட்டு, “தம்பி..” எனும் குரல் அழைக்கவே, திரும்பிப்பார்த்தான். ஆண்ட்டி நின்று கொண்டிருந்தார்.
[அவர் திருச்சிக்குப் பக்கத்தில் ஓர் ஊரைச் சேர்ந்த ஆண்ட்டி. ஆண்ட்டி மற்றும் அவர் கணவர் (அங்க்ல்) இருவரும் மார்ஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பயிற்சியின்போது பரணிக்ரிஷ்ஷுக்குப் பழக்கமாயினர். பரணியும் தஞ்சாவூர் என்பதால் அவர்களோடு பழக்கமானான்.]
“ஆண்ட்டி, நீங்க என்ன பண்றீங்க உங்க டெக்ல இல்லாம?” என ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியோடு கேட்டான் க்ரிஷ்.
“இல்லப்பா பரணி, எங்களுக்கு அப்பர் டெக்கு. கால நீட்ட வாட்டமாயில்ல. இங்க உங்கள்து நீட்டமாருக்கு, படுத்துக்கவும் வசதி. அங்க்குலும் நானும் வயசானவங்க,. நீ கொஞ்சம் டெக் மாத்திக்கோயேன்” என்றார் ஆண்ட்டி.
மார்ஸுக்குப் போகும் ராக்கெட் நெருப்புப் புகை பரப்பிப் புறப்பட்டது.
Comments
Post a Comment
Pass a comment here...