மூங்கையான்

அந்த நாள் மற்ற எல்லா நாட்களைப்போல்தான் துவங்கியது. அதே ஆரஞ்சுச் சூரியன், அதே பால் பாக்கெட் வினியோகம், பீச்சிலும் பார்க்கிலும் நடை பயிலுனர்கள், கூட்டமெடுக்கும் ட்ராஃபிக், ஏறிக்கொண்டே இருக்கும் பரபரப்பு. எல்லோருக்கும் ஏறக்குறைய அதே தினம் தான். மம்மக்கருக்கு மட்டும் கூடுதலாய், பொண்டாட்டி ஓடிப்போயிருந்தாள். 

பொதுவாக இப்படியான வகையில் ஏதேனும் சம்பவம் நிகழ்கையில், அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர் மீது அனைவருக்கும் இரக்கமும் பரிதாபமும் வரும். அவனுடைய சொந்தத் தம்பியோடே ஓடிப்போயிருந்ததால் அந்த இரக்கக் கொடுப்பினைகூட அவனுக்கு முழுதாகக் கொடுத்து வைக்கவில்லை. உச்சுக் கொட்டி குசலம் விசாரிப்போரில் பலருக்கு இதழோரத்தில் ஓர் ஏளனச் சிரிப்பும் இருந்தது. 

அது ஒரு சாவு விழுந்த வீடு போல இருந்தது.

தனது அறையில், கைகளைக் கோத்தும் பிசைந்தபடியும் எதிலும் சிந்தனையற்றுப்போன நிலையிலும் அனைத்து சிந்தனையும் மண்டைக்குள் குழப்பிய நிலையும் கட்டிலில் அமர்ந்திருந்தான். நெற்றியைச் சுருக்கியபடியே வெகுநேரம் இருந்ததால் புருவத்தின் மத்தியில் வலித்தது. உடல் முழுவதும் சூடாக இருந்தது. 

மம்மக்கர் அதிர்ந்தே பேசாதவன். சொல்லப்போனால் பேசவே பேசாதவன். தானும், தன் வேலையும், தனது உணவும் உண்டு என்று இந்த உலகுக்கும் அவனுக்கும் தொடர்பே இல்லையோ எனுமளவுக்குத் தன் அதிரா உலகத்தில் இருப்பவன். அது தாழ்வு மனப்பான்மையோ, அல்லது கூச்ச சுபாவமோ, யாரிடத்தும் அவ்வளவாகப் பேசாது, சொல்லப்போனால் எப்போதும் தலைகுனிந்து நடந்தே பழக்கப்பட்டவன்.

"எப்பப்பாரு தலயத் தொங்கப்போட்டுக்கிட்டே அலயாத, நீட்டி நிமுந்து பாரு" என அவனின் அத்தம்மா அவனைப் பார்க்கும் போதெல்லாம் வைவாள். அவள் வையுமளவுக்கு இவன் எப்போதும் அப்படித்தான் திரிவான். 

யார் வம்புக்கும் போனதில்லை. வந்த வம்பில்கூட நான்கைந்து அடி கூட வாங்கிக்கொண்டு, அதிலிருந்து ஒதுங்கிப்போனபடியே இருந்தான். 

இவன் இயற்கையறிந்து இவனிடம் வேண்டுமென்றே பகடி செய்து வம்புக்கு இழுப்பவர்களும் உண்டு. 

அவர்களிடம் ஏம்ணே எனக்கூறி அங்கிருந்து விரைவாக விலகுவான். 

அவன் தம்பி, ஊரை ஊரிடமே விற்று, விற்ற காசை ஒரு பாக்கெட்டிலும், விற்ற ஊரை நேக்காக மீண்டும் மறு பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டு வந்து விடுவான். 

குடும்பத்தினர் உறவில் பெண் தேடி மம்மக்கருக்குக் கட்டி வைத்தனர். ஊரைக்கூட்டி விருந்து, ஏகபோக மறுவீடு அழைப்பு, முதன்முதலில் மம்மக்கருக்குக் கோட்டு என்று தடபுடலாகவே நடந்தது. 

எண்ணி ஆறுமாதமிருக்கக்கூடும். அல்லது ஏழு. ஏனையோர் அனைவருக்கும் சாதாரணமாகத் துவங்கிய அந்த நாளில் அவனுடைய மனைவி ஓடிப்போயிருந்தாள்.

உறவும் சுற்றமும் சூழ எத்தனையோ பேசியும் யாருக்கும் ஒரு வார்த்தை பதில் பேசவில்லை. அன்று ஒரு நாள் மட்டும் வீட்டிலிருந்துவிட்டு மறுநாள் வேலைக்குக் கிளம்பிவிட்டான். ஒரு கம்பெனியில் பாரீன் செண்ட்டை பாட்டிலில் அடைக்கும் வேலை.

எப்போதும் யாரிடமும் இந்த நிகழ்வு குறித்து அதற்கு முன்னும் பின்னும் எதுவும் பேசவில்லை. 

பிறகொருநாள் அவன் தந்தை இறந்தபோது, மய்யத்துக்கு அஞ்சலி செலுத்த அவன் தம்பி மட்டும் வந்திருந்தான். கைகலப்பு நிகழப்போகிறது என எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றமே.

தம்பி வந்தான். தந்தையின் ஜனாசாவைப் பார்த்தபடி நின்றான். பிறகு வெளியே போடப்பட்டிருந்த சேர்களிலொன்றில் அமர்ந்தான். சிலர் அவனிடம் பேசினார்கள். சிலர் அவனைக்காட்டி தங்களுக்குள் பேசினார்கள். அவர்களின் தாய் உள்ளறையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, சுற்றியிருந்தோர் சப்ர் செய்யுங்க மாமி என அறிவுறுத்திக்கொண்டிருந்தனர். 

அவன் யாரிடமும் முற்றாகப் பேச்சத் துண்டித்திருந்த நிலையில், ஐந்து வருடம் கடந்தபின், அவனுக்கு மற்றொரு கல்யாணம் முடித்து வைத்தாள் அவளன்னை. தூரத்துச் சொந்தத்தில் ஒரு விதவைப் பெண். பெரிதாக யாரையும் அழைக்காமல் வீட்டிலேயே வைத்து டீ பேரீச்சம்பழத்தோடு முடிந்தது. 

அந்தப் பெண் கருவுற்றாள். இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று என்னேரமும் அழுதபடி இருந்தது. மற்றொன்று பசிக்குக்கூட அழவில்லை. ஒரு பாங்கிழவியிடம் இதைக் குறித்துக் கூறியபோது அதற்கு அவள் சில வைத்தியங்களைக் கூறினாள். இருப்பினும் பெரிய முன்னேறம் ஏதுமில்லை. குழந்தையைப் பார்க்க வருவோர் இது எந்த அழுகையும் சத்தமும் இடாமலிருப்பதைக்கண்டு ஊமப்புள்ள என்றே அழைக்கத் துவங்கினர். 

மற்ற எல்லா நாட்களைப்போலத் துவங்கிய ஒரு நாளில் அந்த ஊமைக் குழந்தையைத் தூக்கி, தண்ணித் தொட்டிக்குள் போட்டுவிட்டான் என இக்கதை முடிந்தால் உங்களால் நம்பமுடியுமா?

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂