ஐயம்!



அன்புள்ள ரகுவுக்கு, இல்லை. அன்பெல்லாம் நம் மத்தியில் இல்லை. நீ என் எதிரி. எக்காலத்திலும் என்னால் மறக்கவோ மன்னிக்கவோ முடியா எதிரி. நீ செய்த அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? நான் மன்னிப்பது இருக்கட்டும். முதலில் உன்னாலேயே உன்னை மன்னிக்க முடியுமா? யோசித்துப்பார்.

பார்வதியும் முத்துராமனும் ஓடிக்கொண்டிருந்தனர். ஓடிக்கொண்டிருந்தனருக்கு முன் ”மூச்சிரைக்க”வும், மூச்சிரைக்கவிற்கு முன் ”உயிரைக்கையில்பிடித்தபடி” எனவும் சொன்னால் அவர்கள் இருந்த சூழ்நிலைக்குச் சரியாக இருக்கும். காதல். வெவ்வேறு ஜாதி. முன்னதைப்பின்னது துரத்திக்கொண்டு இதோ அரிவாள்களும் கத்திகளும், இரண்டு பூக்களைக்கொய்ய.

அடேய் தீயவனே. உனக்கு நினைவிருக்கிறதா? இருக்காது. உனக்கெப்படி இருக்கும்? ஒன்றா இரண்டா நீ செய்தவை, உன் நினைவில் தங்க?  நீச்சல் தெரியாத என்னைக் கொஞ்சங்கூட இரக்கமில்லாமல் கண்மாயில் தள்ளிவிட்டாயே? காப்பாற்றச்சொல்லி எத்தனையோ கெஞ்சியும் அரை அவுன்ஸ் கருணை காட்டினாயா நீ? உயிர்பிழைக்கக் கடுமையாய்ப்போராடி கையில் அகப்பட்ட செடிகொடிகளைப்பிடித்து கரையேறினேன். அன்று அவை மட்டும் இல்லாவிட்டால் அது என் கடைசி தினமாயிருந்திருக்கும். உன்னையெல்லாம் தெய்வம் நின்று நிதானித்து, ஆழமாகக்கொல்ல வேண்டும் என எத்தனையோ நாள் பிரார்த்தித்திருப்பேன்.

”இன்னும் எவ்ளோ தூரம் ஓடப்போறோண்டா? என்னால முடியல. நாக்கு வறண்டு மூச்சு எளைக்குது”
“கொஞ்சம் பொறுத்துக்கோ பாரு. அவனுங்ககிட்டருந்து தப்பிக்கணும். உயிர் இருக்குறவரைக்கும் ஓடுவோம்”

இத்தனைக்களேபரத்திலும் முத்துராமனுக்குள் ஒரு குளிர்ச்சி இருந்தது. அதைத்தந்தது அவன் இழுத்து ஓடிக்கொண்டிருக்கும் பார்வதியின் (அவனுக்கு ப்பாரு/ப்பாரும்மா) மென்மையான கரம் (”என்னடி, இவ்ளோ மெத்துமெத்துன்னு இருக்கு? இன்னொரு தடவ தொட்டுப்பாத்துக்கவா?”) அந்தக்குளிர்ச்சி அவனுக்குள் எத்தனையோ நினைவுகளைக்கிளறிவிட்டது. அதே நேரம் பின்னால் துரத்திக்கொண்டிருக்கும் அந்த அரிவாள்கள் குறித்த துர்சிந்தனையும் எழுந்து அவனின் மைக்ரோ நொடி இன்பத்துக்குத் தடை போட்டது.

எனக்குத்தவளைகள் என்றால் பயம் எனத்தெரிந்தே என் புஸ்தகப்பையில் நீ தவளைகளைப் போட்டிருந்தாய். அது தெரியாமல் நான் பைக்குள் கைவிட, அவை என் மீது தாவ, நான் அலற, பயத்தில் எனக்கு ஒரு வாரம் ஜுரம் வந்து நான் பட்ட அவதி யாருக்குத்தெரியும்? அதற்காக நீ ஒரு மன்னிப்பாவது கேட்டாயா என்னிடம்? 

”இந்தத் தடியர்களை எப்படி சமாளிப்பது?” ச்சைக்… இந்தப்பன்னாடைங்களப்பத்தி இலக்கண சுத்தமா வேற நெனைக்கணுமா? இலக்கணம். கடற்கரை மணலில் உட்கார்ந்துகொண்டு என் பாரு எனக்குச் சொல்லிக்கொடுத்தது.

“பாரும்மா… அந்தக்கொழந்தைங்க குதிச்சு குதிச்சு ஓடுறதப்பாறேன்”

“அடுக்குத்தொடர்”

“அப்டின்னா”

“இலக்கணக்குறிப்புடா. ஸ்கூல்ல படிச்சதில்ல? ஒரே வார்த்த ரெண்டுதடவ வரும். பிரிச்சாலும் பொருள் தரும். அதுக்குப்பேரு அடுக்குத்தொடர். பிரிச்சா பொருள் தரலன்னா இரட்டைக்கிளவி”

“ஓ…”

”என்னடா யோசிக்கிற?”

”ம்ம்… உங்கிட்ட எதுல்லாம் அடுக்குத்தொடர்னு யோசிக்கிறேன்… உன் கண்ணு… காது.. ஒதடு…அப்புறம்...”

“ம்ம்ம்… செருப்பு”

“இல்லடி.. அது இரட்டைக்கிளவி” என்று சிரித்த முத்துராமனுக்கு காதலாய் ஒரு குத்துவிட்டாள்.


எனக்கு இயல்பிலேயே பயந்த சுபாவம் என்பதை அறிந்த நீ, கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் என்னை அழவைத்துப்பார்த்தாய். உன்னோடு சேர்ந்து மற்றவர்களும் என்னை பயந்தாங்கொள்ளி என்று கேலிபேசினர். உன்னைக்கொல்ல அய்யனாருக்கு காசுவெட்டிப்போட்டும் நீ சாகாதது எப்போதோ நீ செய்த நன்மை. இல்லையில்லை அது உன் தாயோ தந்தையோ செய்த நன்மை. உனக்கும் நன்மைக்கும் ஏது சம்மந்தம்?

“ப்பாரும்மா… ஒன்னோட குணத்துக்கும் அழகுக்கும் எப்பேற்பட்ட நல்ல மாப்பிள்ளையெல்லாம் கெடப்பானுங்களே. இருக்குறதுலயே ஆகக்கழிசடை என்னப்போய் ஏன் காதலிச்ச?”
“என்னடா… உண்மைலயே உன்னக்காதலிக்கிறேனான்னு சந்தேகப்படுறியா?”
“ச்ச ச்ச இல்லடி. போயும் போயும் என்னப்போல ஒரு சைக்கோவ காதலிக்குறியேன்னு ஒம்மேல பரிதாபப்படுறேன்”
“அதேதான். நல்ல பசங்களுக்கு நெறய பொண்ணு கெடைக்கும். ஒன்ன மாதிரி சைக்கோவ பாத்துக்க பொண்ணு கெடைக்காதுல்ல. அதுக்குதான். பொதுசேவை” என்று கண்ணடித்தவள், இப்போது வியர்த்துவழியும் உடலோடும், எப்படியாவது தப்பிப்பிழைத்து வாழ்ந்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த கண்களோடும் தெருநாய் போல ஓடிக்கொண்டிருக்கிறாள். அந்தக்கோலத்தில் பார்வதியைப் பார்த்ததும் அவனையறியாது கண்ணீர் வந்தது முத்துராமனுக்கு. அரிவாளர்கள் நெருங்கி விட்டதைக்கண்டு எஞ்சிய சக்தியையெல்லாம் சேர்த்துக்கொண்டு மேலும் ஓடினர் இருவரும்.

பள்ளியின் இறுதிநாளில் உன்னிடம் நான் கேட்ட ஒரே வரம் இனி என் வாழ்நாளில் என் கண்முன்னே வந்துவிடாதே என்பதுதான். உனக்குத்தெரியாது, அவ்விரவு நான் எத்தனை நிம்மதியாகத்தூங்கினேன் என்று. இனி உன்னை சந்திக்கவேமாட்டோம் என்ற விஷயமே எனக்கு சொல்லமுடியாத இன்பத்தைத்தந்தது. அடுத்து உன்னை மட்டுமல்ல. உன் போன்ற நபரைக்கூட வாழ்க்கையில் பார்த்துவிடக்கூடாது என்ற வேண்டுதலோடு காலேஜில் சேர்ந்தேன். அங்கு என் வகுப்பில் நீ அமர்ந்திருந்ததைக்கண்ட அந்த நாளில்தான் கடவுள் மீது முதன்முறையாக நம்பிக்கையிழந்தேன். என்னை நானே எரியும் கொப்பறையில் தள்ளியதாய் உணர்ந்தேன். 

”டே… முடீலடா. இதுக்குமேல என்னால ஓட முடியல. சேந்து வாழ நாம குடுத்து வைக்கல. அவங்க என்ன கொன்னா கொன்னுக்கட்டும். நீ தப்பிச்சுப் போய்டு”.
”பாரும்மா… வா நான் தூக்கிக்கிறேன். இன்னும் கொஞ்ச தூரம். அதோ அங்க பார் ஒரு வீடிருக்கு. அங்க போய் ஒளிஞ்சுக்கலாம். கொஞ்சம் பொறுத்துக்கோடா”
அரிவாள் கோஷ்டி அவர்களுக்கு இன்னும் அருகில் வந்துவிட்டனர். மிகுந்த ஆத்திரத்தோடு “அந்தநாய்கள வெட்றா” என்று ஒருவன் கத்திக்கொண்டு வந்தான். பார்வதியும் முத்துவும் புதர் மண்டியிருந்த அந்த வீட்டிற்குள் சென்று கதவைத்தாழிட்டனர். உள்ளே கும்மிருட்டு. பாழடைந்த வீடு. அவ்வளவு தூரம் ஓடி வந்ததால் கால்கள் தளர்ந்து இருவரும் கீழே சரிந்தனர். தாகத்தால் தொண்டை வறண்டு புரையேறி இருமலும் கண்ணீரும் வந்தது. அவர்களை விரட்டி வந்தவர்களின் ஆக்ரோஷக்குரல் அந்த வீட்டை நெருங்கிக்கொண்டே வந்தது.

கல்லூரியிலாவது திருந்தியிருப்பாய் என நினைத்தேன். பள்ளியில் ஆசிரியரின் அடிக்குப்பயந்து ட்ரௌசரிலேயே நான் சிறுநீர் கழித்ததை கல்லூரியில் அனைவரிடமும் சொல்லி என்னை கூனிக்குறுக வைத்ததற்கு உன்னை என்ன செய்தால் தகும்? கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகள் நூற்றாண்டுகள் போலக்கழிந்தன. அதுவரை நான் செய்துவந்த ப்ரார்த்தனைக்கெல்லாம் பலனாக பெரும் விபத்தொன்றில் சிக்கி நீ படுக்கையில் கிடந்தாய். என் கஷ்டத்துக்கெல்லாம் விடிவு கிடைத்த மகிழ்ச்சியில் குதித்தேன். நம்பமாட்டாய். அளவிலா சந்தோஷத்தால் என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. மனதும் வயிறும் அவ்வளவு நிறைந்திருந்தது.

”தட்தட்தட்தட்” – அவர்களிருவரும் தஞ்சம் புகுந்த அந்த வீட்டுக்கதவு தட்டப்பட்டது. உடைக்க முயற்சிசெய்யப்பட்டது என்று சொல்வது சரியான பதம். ”நீங்க கதவ தொறக்கவே வேணாம். உள்ளயே இருங்க. நாங்களே ஒடச்சுட்டு வந்து வெட்டுறோம். ஒங்கள வெட்டிக்கூறு போட்டாதான் அடுத்து யாருக்கும் காதலிக்க பயம் இருக்கும்” என்றது ஒரு முரட்டுக்குரல், அதைத்தொடர்ந்து மீண்டும் “தட்தட்தட்தட்”
இருவரும் அதிர்ச்சியில் உறைந்து இறுகக்கட்டிக்கொண்டனர். அந்தக்கும்பலின் இடைவிடாத தாக்குதலால் கதவு கொஞ்சம் அசைந்துகொடுத்தது.

பிறவிப்பயந்தசுபாவியான எனக்கு, நீ கொடுத்த தொந்தரவுகள் துன்பம் தந்தாலும் ஒரு கட்டத்தில் அலுத்துப்போய் தைரியம் வர ஆரம்பித்தது. அதன்பின் எந்தப்பிரச்சினை வந்தாலும் எதிர்த்துத்துணிந்து நிற்கத்துவங்கினேன். பின் எனக்கு பயம் வந்தபோதெல்லாம் வேண்டுமென்றே உன் பார்வையில் பட்டு நீ என்னைச்சீண்டி அதனால் வந்த தைரியத்தைக்கொண்டு மேலும் மேலும் முன்னேறினேன். ஒரு வகையில் நீ எனக்கு நன்மை செய்திருப்பது உண்மைதான். 

தடியனொருவன் இடித்ததில் கதவு பிளந்து வழிவிட்டது. கட்டவிழ்த்துவிடப்பட்ட எருமைகள்போல் அவர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் உள்ளே வருவதற்குள் பார்வதியை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு ஒற்றையனாய் நின்றுகொண்டிருந்த முத்துராமனை வெட்ட முதல் அரிவாள் பாய்ந்தது.

இத்தனை வருடம் கழித்து இப்போது எதற்கு உனக்குக் கடிதம் எழுதினேன் என்று குழம்புகிறாயா? இக்கடிதத்துக்கு இடையிடையே நீ பார்த்தது நான் எழுதும் முதல் கதை. தெரிந்தோ தெரியாமலோ முத்துராமனும் என்னைப்போல பயந்தாங்கொள்ளியாகப்படைத்துவிட்டேன். இப்போது அவனுக்கு தைரியம் வர என் உதவி தேவை. எனக்குத் தைரியம் வர உன் உதவி தேவை. மீண்டும் என்னை நீ வம்பிழு. எனக்குக்கோபம் வரும். கோபம் வந்தால் தைரியம் வரும். எனக்கு வந்தால் அது முத்துராமனுக்குச்செல்லும். அவன் அவர்களை அடித்து நொறுக்குவான். பார்வதியின் கரம் பிடிப்பான்.

Comments

  1. அட்டகாசம்... இப்போதைக்கு வேறொன்னும் சொல்லதிகாரம் தோணலை...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கைலாசம்

      Delete
  2. அடேடே! அற்புதம் :-) புதிய கோணம். இதை நீங்கள் வார இதழ்களுக்கு அனுப்பியிருக்கணும். அடுத்த கதை நேரே பத்திரிக்கைக்கு தான் :-) வாழ்த்துகள் :-)

    amas32

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா. பத்திரிகை அளவுக்கெல்லாம் இன்னும் ஸ்டஃப் வரல. ஆண்டவன் விட்ட வழி

      Delete
  3. தம்பி, அருமையாக எழுதுகிறீர்கள். வளமான எதிர்காலத்திற்கு வாழ்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க ஆதம்

      Delete
  4. அருமை ,

    ReplyDelete
  5. கலக்கிட்டீங்க.. பாஸ்......

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொல்லும் ஸ்மைலி

      Delete
  6. மிகவும் அருமை... ஆனா... பார்வதி ய ஒரு எடத்துல பார்கவி ஆக்கிடீங்களே...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை சொன்னீங்க. வசமா மாட்டிருப்பேன் ஒருத்தன்கிட்ட. கோட்டான கோட்டி நன்றி விஜய் ஜி

      Delete
  7. Super ya !! Post is rocking as always :-)

    ReplyDelete
  8. பல வருடங்களுக்கு முன் நான் படித்த நாவல்...

    யார் எழுதியது என்று நினைவில்லை...!!?@#

    அதாவது,,

    ஒரு அத்தியாயத்தில் ஒரு கதை...
    அடுத்த அத்தியாயத்தில் இன்னொரு கதை...

    கடைசி இரண்டு, மூன்று அத்தியாங்களில் இந்த இரட்டை கதைகளுக்குள்ளும் இருக்கும் தொடர்பு வெளிபடுத்தப்படும்...

    சிறுகதையில் இந்த பாணி அருமை.!!!

    வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  9. ஹாட்ஸ்ஆஃப்

    ReplyDelete
  10. வித்யாசமான நடை. மிக அருமை . கால்கீடீங்க

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂